புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், ரூ.13,600 கோடி மதிப்பில் புதுவையின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றி வருகிறார்.
முக்கிய அறிவிப்புகள்
1. விவசாயிகளுக்கு மழைகால நிவாரணமாக ரூ. 2,000 வழங்கப்படும்.
2. நியாய விலைக் கடைகளில் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும்.
3. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
4. பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் வாரத்தில் 3 நாள்கள் வழங்கப்படும் முட்டை, இனி வாரம் முழுவதும் வழங்கப்படும்.
5. 6 முதல் 12ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
6. புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி நிதி ரூ. 2 கோடியில் இருந்து ரூ. 3 கோடியாக அதிகரிக்கப்படும்.
7. முதியோர் ஊதியம்பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு தொகை ரூ. 20,000 ஆக அதிகரிக்கப்படும்.
8. புதுவையில் உள்ள அருங்காட்சியகங்கள் மத்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்படும்.
9. கலை பண்பாட்டுத் துறை சார்பில் காரைக்கால் அம்மையார் பெயரில் விருது வழங்கப்படும்
10. புதுச்சேரி ஈசிஆர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும்.