கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும்.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 27ஆம் தேதி உருவாகக்கூடும். தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதேசமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் மற்றும் 26ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றம் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஊட்டி, வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்டங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.