“சீமானை Theme Partner என்ற தமிழிசை இப்போ என்ன சொல்லப் போகிறார்?”

சுதா எம்.பி. - நாதக தலைவர் சீமான்
சுதா எம்.பி. - நாதக தலைவர் சீமான்
Published on

“சீமானை Theme Partner என்று சொன்ன பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் இப்போது என்ன சொல்லப் போகிறார்.?” என மயிலாடுதுறை எம்.பி. சுதா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் பெண்கள் தொடர்பாக பொதுவெளியில், அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார் சீமானுக்கு காங்கிரஸ் எம்.பி.சுதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதா வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்:

தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல அநாகரீகமான மனிதர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் சீமான். பெண்கள் தொடர்பாக பொதுவெளியில், அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார்.

முதலில் இந்த வழக்கு அரசியல் ரீதியான வழக்கு என்ற வாதமே பொய். சீமான் மீது ஒரு நடிகை புகார் தருகிறார்; நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கை ரத்து செய்யுங்கள் என சீமானேதான் நீதிமன்றம் சென்றார். விசாரணை முடிவில், புகாரில் முகாந்திரம் இருப்பதை அறிந்து 12 வாரத்திற்குள் விசாரிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இப்போது நீதிபதிக்கும் உள்நோக்கம் கற்பித்துக் கொண்டிருக்கிறார் சீமான்.

சாமானிய மக்களுக்கான கடைசி நம்பிக்கையாக இப்போது வரை நீதிமன்றங்களும், நீதிபதிகளும்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மூலம் எதை சாதிக்க விரும்புகிறார் சீமான்? நீதிமன்ற அவமதிப்பெல்லாம் வராது என்ற உத்தரவாதம் எதுவும், எங்கிருந்தாவது கிடைத்ததா? எல்லாவற்றிற்கும் மேல், வயசுக்கு வந்த பெண்ணையா கற்பழித்தேன் என பெண்களை சுற்றி உட்கார வைத்துக் கொண்டு எள்ளலான உடல் மொழியில் பேசியது. பெண்களுக்கு எதிரான வன்முறையை இயல்பான ஒன்றாகப் பார்க்கும், இயல்பான ஒன்றாக மாற்றும் வக்கிர புத்தி அதில் ஒன்றுமில்லை.

பெண்களைச் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு பேசியதன் மூலம், சமூகத்திற்கு என்ன சொல்ல நினைக்கிறார் சீமான்? 50%க்கு மேல் பெண்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு, பெண்மையைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார் சீமான். தமிழ்ச்சமூகத்தில் இடம் கொடுக்கப்படாமல் அவர் விரட்டப்பட வேண்டும். பெரியார் தொடர்பில் ஆதாரமின்றி அவதூறாக சீமான் பேசிய போது, அவர் எங்கள் Theme Partner என்று சொன்ன தமிழிசை சௌந்தரராஜன் இப்போது என்ன சொல்லப் போகிறார்?. Theme Partnerன் கருத்தை ஆதரிக்கிறாரா?

அவர் பேசிய பேச்சுகள், எந்த நாகரீக சமூகத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பெண்கள், அந்தக் கட்சியை ஆதரிக்கும் பெண்கள் இனியும் இந்த வக்கிரவாதிக்கு ஆதரவு கொடுப்பதா என சிந்திக்கட்டும். சீமானை ஆதரிக்கும் தம்பிகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சீமான் பிடியிலிருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com