கேரம் உலக சாம்பியன்: தமிழக வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு!

வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கும் துணை முதல்வர்
வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கும் துணை முதல்வர்
Published on

அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலக கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,“விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது.

அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற தங்கை காசிமா உட்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை வழங்கி வாழ்த்தி அனுப்பி இருந்தோம்.

வண்ணாரப்பேட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தங்கை காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்து திரும்பினார்.

அவரைப்போலவே, தங்கை மித்ரா 2 தங்கம், தங்கை நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்று நாடு திரும்பிய போதே அவர்களை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினோம். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகையை வழங்குவோம் என்று அறிவித்தோம்.

தங்கை எம்.காசிமாவுக்கு ரூ.1 கோடி, தங்கை வி.மித்ராவுக்கு ரூ.50 லட்சம், தங்கை கே.நாகஜோதிக்கு ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகையாக இன்று நேரில் வழங்கி மகிழ்ந்தோம். தங்கைகள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் கழக அரசு துணை நிற்கும். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்.” என தெரிவித்துள்ளார் .

logo
Andhimazhai
www.andhimazhai.com