கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் பவர் லிஃப்டிங் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கத்தை ஜாண்டுகுமார் வென்றுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இந்தப் போட்டியில் மொத்தம் 74 நாடுகள் பங்கேற்கின்றன.
ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை இந்தப் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், பாரா பவர் லிஃப்டிங் பிரிவில் இந்தியாவின் சார்பாக பீகாரைச் சேர்ந்த ஜாண்டுகுமார் பங்கேற்றார். இவர் தனது சிறுவயதிலேயே, போலியாவால் பாதிக்கப்பட்டவர்.
ஜாண்டு குமார் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் 130.9 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில், 181 கிலோ, 190 கிலோ பளுவைத் தூக்கிய இவர், 196 கிலோ பளுவைத் தூக்கும்போது தவறவிட்டு விட்டார்.
இதே பிரிவில் இந்திய வீரரான சுதீர் 114.1 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.