“மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின், இந்த ஆண்டு மட்டும் ஏன் கலந்து கொண்டார்?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
“தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்துதான் நேற்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றார் என்றே கருதவேண்டியுள்ளது. சோதனைக்கு பயந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் 3 ஆண்டுகளாக நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் நிதியை கேட்டு பெற்றிருக்க முடியும். எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடி வந்தால் ஸ்டாலின் கருப்பு பலூன் பறக்கவிட்டார். ஆளுங்கட்சியான பின் மோடிக்கு வெள்ளை குடை பிடிக்கிறார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுக அரசில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை.” என்றார்.