மாணவர்கள் பலி; முதல்வர் ஸ்டாலின், ரயில்வே நிர்வாகம் நிவாரணம் அறிவிப்பு!

CM M.K.Stalin
முதல்வர் ஸ்டாலின்
Published on

கடலூர் விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்ததைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகமும் நிவாரணம் அறிவித்துள்ளது.

கடலூர் செம்மங்குபத்தில் பள்ளி வேனும் ரயிலும் மோதியதில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணத் தொகையும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்: “கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் - பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தெற்கு ரயில்வேவும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ . 50 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com