உச்சநீதிமன்றம் - காவிரி
உச்சநீதிமன்றம் - காவிரி

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்!

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்துவிட்டுள்ள நீரின் அளவு குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரி நதிநீர் பங்கீட்டில் கா்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. தீர்ப்பாய உத்தரவின்படி குறிப்பிட்ட நேரத்தில் உரிய நீரை கா்நாடகம் திறக்க மறுப்பதால் தமிழகத்தில் பாசனத் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், நடப்பு ஆகஸ்ட் மாதத்துக்கான நதிநீர் பங்கை கர்நாடகம் வழங்க மறுப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் கடந்த 14-ஆம் தேதி வழக்குத் தொடுக்கப்பட்டது.

அதில், ‘தமிழகத்தில் பயிர்களைக் காப்பாற்ற ஆகஸ்ட் மாதத்தில் விநாடிக்கு 24,000 கன அடி நீா் திறந்துவிட வேண்டியது அவசியமாகிறது’ என்று தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே. மிஸ்ரா ஆகியோர் அமர்வு நேற்று விசாரித்தது. தமிழக அரசு, கர்நாடக அரசு, மத்திய அரசின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘காவிரி ஆணையம் உத்தரவிட்ட அளவின்படி நீா் திறந்துவிடப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறி வழக்கை செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com