ஸ்வீடனில் பள்ளி ஒன்றில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஸ்வீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து 200 கி.மீ தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா என்ற பெயரில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், பள்ளி படிப்பை முறையாக முடிக்காத மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும். நேற்று இந்த பள்ளியில் நுழைந்த மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்திய மர்ம நபரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர் யார்? அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 'இது தனிநபர் நடத்திய தாக்குதலாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இது பயங்கரவாத தாக்குதல் அல்ல' என்று போலீசார் தெரிவித்தனர்.