ஆளுநர் இரவியுடன் முதலமைச்சர் ஸ்டாலின், 4 அமைச்சர்கள் சந்திப்பு
ஆளுநர் இரவியுடன் முதலமைச்சர் ஸ்டாலின், 4 அமைச்சர்கள் சந்திப்பு

ஆளுநர் ரவியுடன் முதல்வர், 4 அமைச்சர்கள் சந்திப்பு - அரசியல்சாசனக் கடமையை வலியுறுத்திப் பேச்சு!

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஆளுநர் இரவியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை சந்தித்துப் பேசினார். நான்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் அப்போது உடனிருந்தனர்.

அரசாங்கத்துக்கும் ஆளுநருக்குமான மோதல் போக்கில், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததன் அடிப்படையில், ஆளுநர் இரவி தன்னைச் சந்திக்க வரும்படி முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தார். வெள்ள நிவாரணப் பணிகளுக்குப் பின்னர் தான் சந்திக்க வருவதாக முதலமைச்சர் தரப்பில் ஆளுநர் மாளிகைக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று மாலை இச்சந்திப்பு நடைபெற்றது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர் இரகுபதி, உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோருடன் அவர் ஆளுநரைச் சந்தித்தார்.   

இச்சந்திப்பின்போது, பல மாதங்களாக ஆளுநர் அவர்களிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தினார். 

அதேபோன்று, தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்துள்ளதைத் திரும்பப் பெற்று, அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திடவும்,

ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்
கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பல மாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன; அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் வழங்கவும் இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீரமணி அவர்கள் தொடர்பான கோப்பினை 15 மாதங்களுக்கு மேலாகவும், எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் தொடர்பான கோப்பினை 7 மாதங்களுக்கு மேலாகவும் ஆளுநர் நிலுவையில் உள்ளதும்  சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்பும், நீண்ட காலமாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டு அவற்றிற்கு ஒப்புதல் அளித்து திரும்ப அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

பொதுவாக, அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டுமென்றும், அப்போதுதான் மாநில மக்களின் நலனுக்கும், நிருவாகத்திற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் ஆளுநர் செயல்பாடு அமையும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். 

நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக அவர் கோரிய அனைத்து விவரங்களும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களால் ஆளுநர் அவர்களுக்கு நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை ஆளுநர் மனதில்கொண்டு, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டுமென்றும், வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களை ஆளுநர் அவர்கள் தவிர்த்திட வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அரசின் சார்பாக மேற்படி கருத்துக்களை முதலமைச்சரும், அமைச்சர்களும், தலைமைச் செயலாளரும் விரிவாக எடுத்துக் கூறினர்.

ஆளுநருக்கு முதலமைச்சர் வழங்கிய கடிதத்தில் அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின்மீதும் தனக்கு மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளதுடன், நிலுவையிலுள்ள மசோதாகள், கோப்புகள் குறித்து தெரிவித்தது, மாநில நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அவற்றிற்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் என்று அரசுச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com