எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு: உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படியும், இதுகுறித்து மே 26ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் புகார்தாரர் மிலானி, தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல எனவும், வேட்புமனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும், இந்த புகார் விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓராண்டு கால அவகாசத்துக்கு பிறகு இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ளாமல் சேலம் நீதிமன்றம், விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் மே 26ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கை தாக்கல் செய்த பிறகு அவசர கதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எடப்பட்டி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணயை ஜூன் 6ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com