நெல்லையில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
நெல்லையில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

கடும் பேரிடராக அறிவித்து, கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும்- முதல்வர் ஸ்டாலின்

நெல்லை,தூத்துக்குடி வட்டாரங்களில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தை கடும் பேரிடராக அறிவித்து கூடுதல் நிதியை மைய அரசு ஒதுக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் இதை வலியுறுத்தினார்.

அந்தப் பேட்டி விவரம்:

கேள்வி : ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு குறித்து ஆளுநர் தெரிவித்தது பற்றி...

முதலமைச்சர் ஸ்டாலின் பதில் : ஆளுநர் வாரத்திற்கு ஒருமுறை டில்லிக்கு சென்று வருகிறார். அப்படி போகும்போது தயவுசெய்து டில்லியில் வாதாடி, போராடி தேவையான நிதியை வாங்கிக் கொடுத்தால் அவர்களுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டிருப்போம்.

கேள்வி : மத்திய அரசால் கொடுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை…. இதுவரை மத்திய அரசிடம் இருந்து நிதி உடனே கிடைக்கும். ஆனால் இந்த மழை வெள்ளத்திற்கு இதுவரையில் நிதி எதுவும் அறிவிக்கவில்லையே?

முதலமைச்சர் ஸ்டாலின் : ஒரு நீண்ட விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் சொல்லிக்கொள்கிறேன். நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள். நான் எதிர்பார்த்திருந்த கேள்வி அது. ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பைப் பற்றி விளக்கம் சொல்கிறேன். இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு இந்த நிதி எவ்வளவு என்பதை ஐந்தாண்டு காலத்திற்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு (Finance Commission) தீர்மானிக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டினுடைய SDRF-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது 900 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது 300 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஏற்றிடவேண்டும். ஒன்றிய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்கப்படும். ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும், இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRF-ல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்றுதான் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இதைத்தான் நானும் மாண்புமிகு பிரதமர் அவர்களை நேரில் சந்தித்தபோதும் வலியுறுத்தி குறிப்பிட்டிருக்கிறேன். மனுவாகவும் கொடுத்திருக்கிறேன். ஆனால் இன்று வரை இந்த இரண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை.

NDRF-இல் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRF-க்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல.

சவாலான நிதிநிலைச் சூழல் இருக்கும் போதிலும், ஒன்றிய அரசு இந்தக் கூடுதல் நிதி தராத போதிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு நிதியைச் செலவிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். சென்னையில் நிவாரண உதவிக்கும் மீட்புப் பணிகளுக்கும் 1500 கோடி ரூபாய்க்குக் கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. நான் இன்று இங்கு அறிவித்துள்ள நிவாரண உதவிகளுக்கும், பணிகளுக்கும் 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள், குடிநீர்த் திட்டங்கள், மருத்துவமனைகள், பல்வேறு கட்டடங்கள் போன்றவற்றை சீரமைப்பதற்கும் பெரும் நிதி தேவைப்படும்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அதே நேரத்தில், இந்த வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பாக சாலைகள், மருத்துவமனைகள், பாலங்கள், மின்கட்டமைப்புகள் ஆகியவற்றை சீர்செய்யும் பணிக்காக தமிழ்நாடு அரசு உடனடி முன்பணமாக மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 250 கோடி ரூபாயை விடுவிக்க ஆணையிட்டுள்ளேன். அதோடு மேலும் தாமதமின்றி இந்த இரண்டு பேரிடர்களையும் கடும் பேரிடர்களாக அறிவித்து ஒன்றிய அரசு NDRF-இல் இருந்து கோரப்படுள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் சார்பிலும் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: அணைகளிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடுப்பட்டுள்ளது குறித்து....

அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்: அணையின் இருப்பை பொறுத்தமட்டில் முதல் நாளிலிருந்து எவ்வளவு கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்பதை நாங்கள் அறிவித்துக் கொண்டிருந்தோம். 45,000 கனஅடி தண்ணீர் வருகிறபோது, இது 1 இலட்சத்தை தொடும் என்பதையும், வெள்ளப் பெருக்கு வருகிறது என்பதை நாங்கள் குறுஞ்செய்தி மூலமாக அனைவருக்கும் முன்னரே தெரிவித்திருக்கிறோம். அதற்குப்பிறகு இரவு கடுமையாக, தொடர்ச்சியாக மழை வருகிறபோது 1 இலட்சம் கனஅடி அளவிற்கு தண்ணீர் வருகிறது. நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த காரணத்தினால்தான் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருக்கக்கூடியவர்களை நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு போயிருக்கிறோம். நீங்கள் குறிப்பிடுவதைப்போல, குற்றச்சாட்டு யார் வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் உண்மை நிலவரம் இதுதான்.

கேள்வி: வெள்ளப் பெருக்கு குறித்த தகவல் கொடுத்திருந்தால் வீட்டில் உள்ளவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்கிறார்களே…

அமைச்சர் தங்கம் தென்னரசு:

நீங்கள் சொல்வதைப் போல, கரையோர மக்களுக்கு எந்தவிதமான அறிவிப்பு இல்லாமல் இருந்திருந்தால், 1,45,000 கன அடி தண்ணீர் வருகிறபோது, எவ்வளவு பெரிய உயிரிழப்பு வந்திருக்கவேண்டும். நீங்களே பாருங்கள். நாங்கள் முன்னரே அறிவித்த காரணத்தால் தான் பல பேர் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் பதில் : 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரியை மனதில் வைத்து நீங்கள் பேசுகிறீர்கள். அதுவல்ல இது. முதலில் அதை தெரிந்துகொள்ளுங்கள்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: நேரடியாக செய்தியாளர்கள் சந்திப்பில், முதல் நாள் இரவு அத்தனை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கறோம். இவ்வளவு கனஅடி தண்ணீர் வரப்போகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வரவேண்டும் என்பதற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும் கேட்டிருந்தோம். காவல்துறை, தீயணைப்புத்துறையினர் அங்கிருந்து பலபேரை வெளியேற்றிய காரணத்தினால்தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி சிலர் அங்கே இருந்திருக்கிறார்கள். இருந்தவர்களையும் அடுத்த நாட்களிலிருந்து உங்களுக்கு தெரியும், படகுகளை பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்து, அவர்களை காப்பாற்றியிருக்கிறோம்.

கேள்வி : தாமிரபரணி ஆற்றின் கிளை நதிகளிலிருந்து நிறைய அணைகளை திமுக அரசு கட்டியிருக்கிறது. இப்போது ஆத்தூர் முக்காணி அருகில் ஒரு அணை கட்டுவதற்கு பொதுமக்கள் விரும்புகிறார்கள். திமுக அரசு அதை நிறைவேற்றுமா?

முதலமைச்சர் ஸ்டாலின் :  அதையெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். ஆய்வு செய்த பிறகு அதன்படி நடக்கும். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல எங்கெங்கு தேவைப்படுமோ அதற்குரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.

கேள்வி : நேரில் பிரதமரை சந்தித்தபோது, நிவாரண நிதி சம்பந்தமாக பிரதமர் ஏதும் பதில் கூறினாரா?

முதலமைச்சர் ஸ்டாலின் : 20 நிமிடம் எங்களிடம் பேசினார். எல்லாவற்றையும் விவரமாக கேட்டறிந்தார். அனைத்தையும் விவரமாக சொல்லியிருக்கிறோம். பிரதமர் உடனே கவனிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

கேள்வி : எதிர்க் கட்சித் தலைவர் குற்றம் சாட்டியிருக்கிறார், தமிழக அரசு வெள்ளப் பாதிப்புகளை சரியாக கையாளவில்லை என்று சொல்லியிருக்கிறார். தங்கள் பதில்…

முதலமைச்சர் ஸ்டாலின் :  யார்? தூத்துக்குடி மக்களைச் சுடச் சொல்லிவிட்டு - டிவியைப் பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்னு சொன்னாரே அவரா?

logo
Andhimazhai
www.andhimazhai.com