சம்பா பயிரைக் காக்க பிப்.3 முதல் மேட்டூர் அணை திறப்பு!

சம்பா பயிரைக் காக்க பிப்.3 முதல் மேட்டூர் அணை திறப்பு!

காவிரிப் பாசனப் பகுதியில் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து 3.2.2024 முதல் இரண்டு டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் பல்வேறு தரப்புகளில் அரசுக்கு வலியுறுத்திவந்தனர்.

வரும் சட்டமன்றக் கூட்டத்திலும் இப்பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்ட அரசுச் செய்திக்குறிப்பில்,

“ பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கரும், என மொத்தம் 22,774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது.

எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. தண்ணீரை 3.02.2024 முதல் திறந்துவிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com