முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்Office

தமிழக, காரைக்கால் மீனவர்கள் கைது- வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் 9.12.2023 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோல தொடர்ந்துகைது செய்யப்பட்டு வரும் நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், IND-TN-06-MM-7675 பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும், IND-PY-PK-MM-1499என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்களும், 9-12-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று கவலைபடத் தெரிவித்துள்ளார். 

அதோடு, IND-TN-10-MM-558 என்ற பதிவெண் கொண்ட மற்றொருமீன்பிடிப் படகு இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பலால் சேதப்படுத்தப்பட்டுள்ளதையும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது, நமது மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மேற்கொள்ள உத்தரவிடுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com