திட்டமிட்டபடி பேருந்து ஊழியர் வேலைநிறுத்தம்- கோரிக்கைகள் நிராகரிப்பு!

திட்டமிட்டபடி பேருந்து ஊழியர் வேலைநிறுத்தம்- கோரிக்கைகள் நிராகரிப்பு!
Published on

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினருடன் நடத்தப்பட்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிலாளர் சங்கக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில்தொழிலாளர் சங்கக் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட பேச்சுகளைப் போல, இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. தொழிலாளர் கூட்டமைப்பினர் முன்வைத்த ஆறு கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசின் நிதிநிலைமை போதுமானதாக இல்லை என அரசுத் தரப்பில் மீண்டும் கூறப்பட்டது. 

அரசின் வாதத்தை கூட்டமைப்பினர் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்புப் பொறுப்பாளர்கள் சிஐடியு சௌந்தரராசன், ஏடிபி கமலக்கண்ணன் உட்பட்டோர், இன்று மாலை 6 மணிவரை அரசின் சார்பில் சாதகமாக பதில்வந்தால்தவிர, தங்களின் வேலைநிறுத்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினர். 

அரசின் பக்கம்தான், பேருந்தின் ஆக்சிலிரேட்டர், பிரேக் எல்லாம் இருக்கிறது என்று சௌந்தரராசன் சிலேடையாகக் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com