அ.தி.மு.க. அமைப்புச் செயலாளார் ஜெயக்குமார்
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளார் ஜெயக்குமார்

“தீய சக்தி தி.மு.க.வை பழனி‘சாமி' சம்ஹாரம் செய்வார்” – ஜெயக்குமார் ஆவேசம்!

“சூரபத்மனை அந்த வடிவேல் முருகன் வென்றது போல் தமிழகத்தின் தீய சக்தி தி.மு.க.-வை எங்கள் பழனி'சாமி' மக்கள் துணையோடு சம்ஹாரம் செய்வார்.” என்று அ.தி.மு.க. அமைப்புச் செயலாளார் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை- வெற்றிபெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை..” என்ற கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில், தான்தோன்றித்தனமாக, மக்கள் விரோத ஆட்சி நடத்தும் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளை, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எங்களுடைய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் சுட்டிக்காட்டினார்.

உண்மை எப்போதுமே சுடும். அந்த சூட்டின் வேகம் தாங்காமல் ஸ்டாலினின் அள்ளக்கைகளில் தலையாய அள்ளக்கையான 'ஆலந்தூர் பாரதி' நரி ஊளையிடுவது போல் அறிக்கை என்ற பெயரில் பிதற்றி இருக்கிறார்.

சேற்றிலே புரளும் தன்மை கொண்ட விலங்கை நினைவுபடுத்துவது இந்த நாலாந்தர பேர்வழியின் வழக்கம் என்பதை மக்கள் நன்கறிவார்கள். அதேபோல், மக்கள் நலப் பணிகளில், முதலமைச்சராக இருந்தபோதும் சரி, இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதும் சரி, எடப்பாடியார் அவர்கள் இதயசுத்தியோடு பணியாற்றுவதை மக்கள் நன்கு அறிவார்கள்.

எங்கள் பொதுச் செயலாளர் கேட்ட கேள்விகளுக்கும், சுட்டிக் காட்டிய குறைகளுக்கும், விளையாட்டு அமைச்சரின் வாய்க் கொழுப்பு குறித்த விமர்சனங்களுக்கும், முன்வரிசை அமைச்சர்கள் பலர் பொன்முடியை தொடர்ந்து நீதிமன்றத்தில் தண்டனை பெற இருப்பது பற்றியும், எடப்பாடி பழனிசாமி எடுத்து வைத்ததற்கு, முறையாக பதிலளிக்க வக்கற்ற மு.க. ஸ்டாலினும், அவர் அள்ளி வீசும் எலும்புத் துண்டுகளை கவ்வி குரைப்பவர்களுக்கும் நாவடக்கம் தேவை.

கருணாநிதி உயிரோடு இருந்தபோதே, தி.மு.க. அடைந்த தோல்வி வரலாறுகளை மறந்துவிட்டு, 2014 பாராளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு அ.தி.மு.க. வென்ற வரலாற்றை மறந்துவிட்டு, 2011-ல் எதிர்க்கட்சி அந்தஸ்த்தைக்கூட அடைய முடியாமல் மூளி அலங்காரியாக தி.மு.க. நின்ற அவலத்தை உணராமல், தோல்வி சாமி என்று மக்களின் முதல்வர் எடப்பாடியாரை ஏகடியம் பேசுகிறது கோபாலபுர கொத்தடிமை பாரதி.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளை கோடிகளில் விலைபேசி வாங்கி அவைகளின் முதுகில் ஏறி சவாரி செய்து, பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசி அரியணை ஏறிய மு.க. ஸ்டாலினின் எடுபிடிக்கு ஒரு சவால்.

'வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தி.மு.க.-வுக்கோ, அதன் தலைவர் ஸ்டாலினுக்கோ, அடாவடி பேச்சழகன் ஆலந்தூர் பாரதி தூக்கிப் பிடிக்கும் உதவாநிதிக்கோ துணிவுண்டா?" தனித்துப் போட்டியிட்டு வென்று காட்டிய எங்களுக்கு அந்தத் துணிவு உண்டு.

சூரபத்மனை அந்த வடிவேல் முருகன் வென்றது போல் தமிழகத்தின் தீய சக்தி தி.மு.க.-வை எங்கள் எடப்பாடியார் பழனி'சாமி' மக்கள் துணையோடு சம்ஹாரம் செய்வார். எனவே, இனியாவது நாவடக்கத்துடன் எங்கள் பொதுச் செயலாளருடைய பேச்சில் உள்ள உண்மைகளை உணர்ந்து, மீதி உள்ள 29 மாதங்களில், வாக்களித்த மக்களுக்குத் தேர்தலின்போது நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com