வைகோ
வைகோ

பாரத் தேங்காய் எண்ணெய் - மாநிலங்களவையில் வைகோ பேச்சு!

கொப்பரைத் தேங்காயை அரசே பதப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என்று வைகோ மாநிலங்களவையில் பேசினார்.

இதுகுறித்து அவர் பேசியது:

” ஒன்றிய அரசு நிறுவனமான, இந்திய வேளாண்மை கூட்டுறவு விற்பனை ஆணையம் , விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய்களை ஒரு கிலோ 108 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து ஒரு லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 90 சதவீத தேங்காய்கள் வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் கொப்பரை தேங்காய் விலை 90 ரூபாயிலிருந்து 85 ரூபாயாக குறைந்துள்ளது.  இந்திய வேளாண்மை கூட்டுறவு சங்க ஏலத்தில் விற்பனை செய்யும் வாய்ப்பை பயன்படுத்தி, பெரிய நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து, ஒரு கிலோ தேங்காயை 65 ரூபாய்க்கு ஏலம் எடுக்க திட்டமிட்டுள்ளன. இதன் மூலம், ஒரு கிலோ கொப்பரை தேங்காய் விலை 50 ரூபாயாகக் குறைந்துவிடும். தேங்காய் விலை 12 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக சந்தையில் குறையும். இது நடந்தால் தென்னை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெரும் நஷ்டத்திற்கு ஆளாக நேரிடும்.

இத்தகைய நடவடிக்கையில் இருந்து பாதுகாக்க, தேங்காயை அரசு நிறுவனமே பதப்படுத்தி,  எண்ணெய் ஆக சந்தைப்படுத்த வேண்டும் என்று கோரி தென்னிந்திய விவசாயிகள் சங்கம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்திய வேளாண்மை கூட்டுறவு விற்பனை ஆணையம், விவசாயிகளிடமிருந்து கோதுமையை கொள்முதல் செய்து, ‘பாரத் அட்டா’ என்ற பெயரில் கோதுமை மாவையும், பருப்பை வாங்கி ‘பாரத் தால்’ என்ற பெயரிலும், வெங்காயத்தை ‘பாரத் வெங்காயம்’ என்ற பெயரிலும் விற்பனை செய்து வருகின்றது.

எனவே, கொப்பரைத் தேங்காயைப் பதப்படுத்தி, பொதுமக்களுக்கு விற்பனை செய்ய, ‘பாரத் தேங்காய் எண்ணெய்’ என அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என இந்திய தென்னை விவசாய சங்கங்கள் சார்பில் வலியுறுத்துகிறேன். இதன் மூலம், இடைத்தரகர்களை அகற்றி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர்.” என்று வைகோ கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com