புதுக்கோட்டை நமணசமுத்திரம் விபத்து
புதுக்கோட்டை நமணசமுத்திரம் விபத்து

புதுக்கோட்டை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 5 பேர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், நமணசமுத்திரம் அருகே திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில், மூன்று வாகனங்களில் சென்ற ஐயப்ப பக்தர்கள், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு தேநீர் அருந்திகொண்டிருந்தனர். அப்போது, சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று  வேகமாக மோதியது.

இந்த விபத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பனஞ்சேரியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 60), சாந்தி (வயது 55), திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (வயது 26), சென்னை மாவட்டம் அமைந்தகரையைச் சேர்ந்த சதீஷ் (வயது 25) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல், பாக்கியலட்சுமி நகர், அன்னை இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த சுரேஷ் (வயது 39) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com