4 துணை மின்நிலையப் பணியால் படிப்படியாக மின்சாரம்: புரிந்துகொள்ள அரசு வேண்டுகோள்!

4 துணை மின்நிலையப் பணியால் படிப்படியாக மின்சாரம்: புரிந்துகொள்ள அரசு வேண்டுகோள்!

சென்னையில் துணை மின்நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் எச்சரிக்கையுடன் மின் விநியோகப் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது; இந்த அசாதாரணமான சூழலைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

” நேற்று (04.12.2023) காலை 12 மணி நிலவரப்படி 112 மெகாவாட் ஆக இருந்த சென்னை நகரின் தேவை இன்று (05.12.2023) மாலை 7:30 மணி நிலவரப்படி 1,488 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, சென்னை மாநகரத்தின் மையப்பகுதிகளில் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு தற்போது சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் மொத்தமுள்ள 1,812 மின்னூட்டிகளில் (FEEDERS) 1,610 மின்னூட்டிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 202 மின்னூட்டிகளை (FEEDERS) சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அன்னை நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், அரும்பாக்கம், ஆவடி, காமராஜ் நகர், கொரட்டூர், மேனாம்பேடு, நொளம்பூர், கள்ளிக்குப்பம், ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு, SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, S & P பொன்னியம்மன் நகர், கோயம்பேடு மார்க்கெட், மதுரவாயல், முகப்பேர் கிழக்கு, புழல், ஆர்.வி. நகர், டி,ஐ. சைக்கிள், அண்ணா நகர் மேற்கு ஆகிய இடங்களின் ஒரு பகுதி,

சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், இராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள், சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பேப்பர் மில்ஸ் ரோடு, கொருக்குப்பேட்டை, திருவற்றியூர், CMBTT, ICF, இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பெரியார் நகர் ஆகிய இடங்களின் ஒரு பகுதிகள்,

சென்னை தெற்கு - I மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகர், கிண்டி, இராமாபுரம், இராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு - II மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மழைநீர் சூழ்ந்துள்ள காரணத்தால், 230 கி. வோ. KITS பார்க் துணை மின் நிலையம், 110 கி.வோ. பெரும்பாக்கம் துணை மின் நிலையம், TNSCB மற்றும் மணலி துணை மின் நிலையங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கம், புளியந்தோப்பு, பின்னி மில், ஸ்பர் டேங்க் ரோடு, நேரு ஸ்டேடியம், தாமோதரன் தெரு, முத்தமிழ் நகர், கொளத்தூர் பாலாஜி நகர், சாத்தாங்காடு, மீஞ்சூர், கல்மண்டபம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பஞ்சட்டி, நாப்பாளையம், திருவெள்ளவாயல், சாந்தி காலனி, எம்.எம். காலனி, மதுரவாயல் தெற்கு, போரூர் கார்டன், பெரும்பாக்கம், TNSCB, சிப்காட், சிருசேரி, முடிச்சூர், பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களின் சில பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் ஈரப்பதம் நிலவி வரும் காரணமாக மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்திற்குட்டப்பட்ட மின் இணைப்புகளை சீரமைப்பதற்கான சிறப்பு அலுவலராக திரு சுதர்சன், மேற்பார்வைப் பொறியாளர் / மின்கூட்டு ஆராய்வு மற்றும் தொலைத் தொடர்பு & அலைப்பேசி கோபுரங்களுக்கான மின்சாரத்தினை சீரமைப்பதற்கான சிறப்பு அலுவலராக திருமதி நிறைமதி, மேற்பார்வைப் பொறியாளர் / தகவல் தொழில் நுட்பம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணை மின் நிலையங்கள். மின்னூட்டிகள், மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் ஈரப்பதம் காரணமாக பொது மக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைப்பெற்று வருகிறது.

இந்த அசாதாரணமான சூழலில் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை தவிர்க்க மின்சார வாரியம் முழுமூச்சுடன் பணியாற்றி வந்தாலும், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களால் மின் விநியோகம் சீரமைப்பதில் ஏற்படும் தாமதத்திற்குரிய சூழலை புரிந்து கொண்டு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com