(மாதிரிப்படம்)
மாநகரப் பேருந்து

பேக்கரிக்குள் பாய்ந்த பேருந்து - அன்புமணிக்கு சந்தேகம்!

பிரேக் பிடிக்காமல் அரசுப் பேருந்து  கடைக்குள் புகுந்த சம்பவம் பேருந்துகள் பராமரிக்கப்படாதது போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்குவதற்கான சதியா என்று பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 


திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து  நேற்று தேனி நகரத்திற்கு புறப்பட்ட அரசுப் போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான பேருந்து, அடுத்த சில நிமிடங்களில் பிரேக் பிடிக்காமல் சாலையோரத்தில் இருந்த இனிப்புக் கடை மீது மோதி, உள்ளே புகுந்துள்ளது. இந்த விபத்தில் இனிப்புக்கடை முழுமையாக  சேதமடைந்தது மட்டுமின்றி, கடையில் இருந்த பெண் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விவரங்களைக் குறிப்பிட்டு இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே  அரசுப்  பேருந்து பிரேக் பிடிக்காமல் கடை மீது மோதுகிறது என்றால், அந்தப் பேருந்து எந்த அளவுக்கு மோசமாக பராமரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். குறைந்த வேகத்தில் சென்று கடை மீது மோதிய  பேருந்து, அதிக வேகத்தில் சென்று சாலையோரம் நிற்கும் மக்கள் கூட்டத்தின் மோதியிருந்தால் என்னவாகியிருக்கும்? என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கு மட்டுமின்றி,  அவற்றைப் பார்த்தாலே அஞ்சி ஓடும் நிலை  ஏற்பட்டு வருகிறது.” என்றும்

”அரசுப் பேருந்துகளின் நிலைமை நாளுக்கு நாள் கவலையளிப்பதாக மாறி வருகிறது. அரசுப் பேருந்துகள் பழுதடைந்து பாதியில் நிற்காத, விபத்துக்கு உள்ளாகாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது.  இதே திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த வாரம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே அரசுப் பேருந்தின்  சக்கரம் தனியாக கழன்று ஓடியது.  ஓட்டுநர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு  பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்தும், உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட பரபரப்பு விலகும் முன்பே அரசுப் பேருந்து இனிப்புக் கடைக்குள் நுழைந்து மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்றும் கவலையுடன் தெரிவித்துள்ளார். 

”அரசுப் பேருந்துகள் ஒரு காலத்தில் மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தன. அவை ஏழை, எளிய மக்களின் பயணத் தோழனாக திகழ்ந்தன. அந்த நிலை இன்று மாறியதற்குக் காரணம்  தமிழக அரசு மற்றும் போக்குவரத்துத் துறையின்  செயலற்ற தன்மை தான்.  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கத்தகுதியற்றவை தான். அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தாலும்  அது வெற்று அறிவிப்பாகவே உள்ளது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாவது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்த நிலையில், அரசு பேருந்துகளில் இருந்து 17,459 பழுதுகள் கண்டறியப்பட்டதாகவும்,  அனைத்து பேருந்துகளிலும்  ஏற்பட்ட  பழுதுகள்  மே 6-ஆம் தேதிக்குள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்திருந்தன. ஆனால், ஒரு பேருந்து கூட முழுமையாக பழுது நீக்கப்படவில்லை என்பதற்கு திண்டுக்கல்லில்  நேற்று நடைபெற்ற விபத்து தான் எடுத்துக்காட்டு.

தமிழக அரசு நினைத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை சீரமைக்கலாம். ஆனால்,  தமிழக அரசோ, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த மறுப்பது, புதிய பேருந்துகளை வாங்க மறுப்பது, பழைய பேருந்துகளை பழுதுபார்க்கத் தவறுவது என எதிர்மறையான  செயல்களிலேயே ஈடுபட்டு வருகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை முழுமையாக முடக்கி தனியாரிடம் ஒப்படைக்க  அரசு சதி செய்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.  இதை போக்க வேண்டியது அரசின் கடமை.


இதை உணர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி  பழைய பேருந்துகள் அனைத்த்தையும்  பழுது பார்க்க வேண்டும்.  போதிய அளவு தொழில்நுட்பப் பணியாளர்களை நியமிக்கவும், உதிரி பாகங்களை  வாங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.   அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கவும்  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com