எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

போலீஸ், பேருந்து ஊழியர் மோதல்... வேடிக்கைபார்த்த ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

பேருந்தில் பயணச்சீட்டு வாங்குவது தொடர்பாக காவல் துறை, பேருந்துத் துறை இரண்டுக்கும் இடையே பனிப்போர் நடைபெறுவதாகவும் அதைத் தடுக்க நிர்வாகத் திறன் இல்லாமல் தி.மு.க. அரசு தவறிவிட்டதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியிருக்கிறார்.

”தமிழக காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், தாங்கள் பணி செய்யும் மாவட்டங்களில் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று கடந்த 2021-ல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பு, இந்த அரசின் மற்ற அறிவிப்புகளைப் போலவே வெற்று விளம்பரத்திற்கான கண்துடைப்பு அறிவிப்புதான் என்பதை, நாங்குனேரியில் காவலருக்கு இலவசப் பயணம் மறுக்கப்பட்டதும், அதற்கு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள விளக்கமும் தெள்ளத்தெளிவாக்கிவிட்டது.” என்றும் அவர் கூறியுள்ளார். 

மேலும், ”ஸ்டாலின் அவர்களே, உங்கள் தி.மு.க. அரசின் அறிவிப்புகள் சட்டப்போவை அறையை விட்டாவது வெளியே செல்கிறதா? உங்கள் மொழியிலேயே சொல்லப்போனால் "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்ற அளவில்தான் உங்களுடைய அறிவிப்புகளும், திட்டங்களும் இருக்கின்றன.  இந்நிலையில், தி.மு.க அரசின் கீழ் இயங்கும் காவல்துறையினருக்கும். போக்குவரத்துத் துறையினருக்கும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மோதல் போக்கு உருவானதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. ஒரு அரசின் இரு துறைகள் மோதிக்கொள்ளும் செய்தி இதுவரை வரலாற்றில் யாகும் கேட்டிராதது.

திரைப்படக் காட்சி ஒன்றில் வருவதைப் போல, முதலமைச்சர் "எது பெரியதென்று அடித்துக் காட்டுங்கள்" என்ற மனநிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும், ஒரே ஒரு அறிவிக்கை மூலம் எப்போதோ தீர்த்திருக்க வேண்டிய சிறிய பிரச்சனைக்கு, மூன்று நாட்கள் கழித்து இரு துறைச் செயலாளர்களையும் அழைத்துப் பேசும் அளவிற்குச் சென்றது, தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, காவலர்களுக்கான இலவசப் பயணத்தை உடனடியாக அமல்படுத்துமாறும், இதனால் போக்குவரத்துத் துறைக்கு நிதி இழப்பு ஏற்படும்பட்சத்தில், அதனை அரசு சரிசெய்ய வேண்டும்.

பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புடைய காவல்துறை, போக்குவரத்துத் துறை இடையிலான பணிப்போரை தடுக்கத் தவறி ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கிய இந்த விடியா திமுக அரசின் போக்கை கண்டிக்கிறேன். உடனடியாக இப்பனிப்போரை சரி செய்ய உரிய உத்தரவு பிறப்பித்து இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும்.” என்று சற்றுமுன்னர் வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com