தமிழக மீனவர்
தமிழக மீனவர்

27 மீனவர்கள், 5 படகுகளை விடுவிக்க முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க மைய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 

அக்கடிதத்தில், இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில், இரு வேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களின் மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி முதலமைச்சர் தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார் என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” கடந்த 14.10.2023 அன்று IND-TN-MM-237, IND-TN-10-MM-970, IND-TN-10-MM-56 மற்றும் IND-TN-10-MM-708 ஆகிய பதிவு எண்கள் கொண்ட 4 மீன்பிடிப் படகுகளில் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களும், மற்றொரு சம்பவத்தில் IND-TN-11-MM-726 பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, தான், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, தொடர்ச்சியாக இதுபோன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள்  மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்கள் கைது செய்யப்படுவதால், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்களால் மீனவ சமுதாயக் குடும்பத்தினருக்குப் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதோடு, இத்தொழிலை நம்பியுள்ள எண்ணற்ற குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, உடனடியாக தூதரக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சரை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.” என்றும் அரசுச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com