முடுக்கிவிட்ட முதல்வர்- மேயரைவிட கள வேலையில் அமைச்சர்கள்!
சென்னை மழை வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்ய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனியாக வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார், முதலமைச்சர் ஸ்டாலின். அதையடுத்து வேறு வேலைகளாக இருந்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதிப் பக்கம் சென்று பார்வையிட்டனர். அமைச்சர் சேகர்பாபு வடசென்னையிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென்சென்னை பகுதியிலுமாக பல இடங்களுக்கும் நடந்துசென்று வெள்ள பாதிப்பைப் பார்வையிட்டனர்.
கடந்த வாரம் மழை பாதிப்புகளை முதல் முறையாக அமைச்சர்கள் தலையீடு இல்லாமல் சுயமாகப் பார்வையிட்டு கையாண்ட சென்னை மேயர் பிரியா, இந்த மழையில் இரண்டு அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதாயிற்று.
மேயர் செய்யவேண்டியவற்றை எல்லாம் அமைச்சர்களே உடனுக்குடன் செயல்பட்டு உத்தரவுகளை வழங்கியபடி இருந்தார்கள்.
இதனிடையே மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் கட்டுப்பாட்டு உதவி மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வுசெய்து பணிகளை மேலும் விரைவுபடுத்தினார். அமைச்சர்கள், அதிகாரிகளிடம் அவர் விவரங்களைக் கேட்டறிந்தார்.