
அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திவரும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஆற்காடு எம்.எல்.ஏ. சுகுமாரும் திருப்பத்தூர் நிர்வாகிகள் கூட்டத்தில் ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. வீரமணியும் கலந்துகொள்ளவில்லை.
தேர்தல் தோல்விக்கான காரணங்கள், அடுத்து செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அ.தி.மு.க.வில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், தலைமை நிர்வாகிகள் கலந்துகொண்டு வருகின்றனர்.
இன்று நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சுகுமாரும் பிறகு திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான வீரமணியும் பங்கேற்கவில்லை.
இவர்களுக்கு ஏற்கெனவே இருந்த பதவியைப் பறித்து புதிய பதவிகளை வழங்கியதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்துவருகிறது. இந்த நிலைமையில் அவர்கள் இருவரும் தலைமையின் ஆலோசனைக் கூட்டத்தையே புறக்கணித்தனர்.