21 மீனவர்கள், 133 படகுகளை விடுவிக்கச் செய்யவேண்டும்- தமிழக அரசு கடிதம்!
(கோப்புப் படம்)

21 மீனவர்கள், 133 படகுகளை விடுவிக்கச் செய்யவேண்டும்- தமிழக அரசு கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் (06.12.2023) சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், இலங்கைக் கடற்படையினரால் 133 மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் வசமுள்ளன.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், IND-TN-10-MM-1061 IND-TN-08-MM-231, IND-TN-08-MM-385 மற்றும் IND-TN-06-MM-707 ஆகிய பதிவு எண் கொண்ட மீன்பிடிப் படகுகளில் இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் 6-12-2023 அன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கவலைபடத் தெரிவித்துள்ளார்.

மீன்பிடித் தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப்புப் படகுகளையும் விடுவிப்பதோடு, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்

வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை வலியுறுத்தியுள்ளார் என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com