
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 36.52 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது என்று அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் இன்று (பிப்.12) புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க உள்ள உயிரியல் மற்றும் மருந்துகள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து 36,968 கோடி ரூபாய் முதலீட்டில் 60,823 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
31,934 கோடி ரூபாய் முதலீட்டில் 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்துசெய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்பி.ராஜா, “கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 36.52 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்களில் 867 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மத்திய அரசின் தரவுகளின் படி 29.63 லட்சம் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
வெறும் கையெழுத்திடுவதோடு நிறுத்தாமல், திட்டங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதே அரசின் நோக்கம். 2024 உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட 631 ஒப்பந்தங்களில் 83.52% அதாவது 527 ஒப்பந்தங்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வரத் துவங்கிவிட்டன. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் போடப்பட்ட 69 ஒப்பந்தங்களில் 48 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன எனவும் தெரிவித்தார்.