மழை
மழை

நாளை 4 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமான - மிக கனமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், இன்றைய அன்றாட ஊடகச் சந்திப்பில் இதைத் தெரிவித்தார். 

காவிரிப் படுகை மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார். 

சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழை இருக்கும் என்றும் தமிழ்நாட்டின் அனேக இடங்களில் மிதமான மழை இருக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. 

இன்று நண்பகலுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. 15 இடங்களில் கன மழையும் 5 இடங்களில் மிக கன மழையும் பெய்துள்ளது. 

தெற்கு அந்தமான கடற்பகுதியில் வரும் 26ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் மறுநாள் 27ஆம் தேதியன்று அது மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து தென்கிழக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கடலுக்குள் சென்றவர்கள் 26ஆம் தேதிக்கு முன்னர் கரை திரும்பிவிட வேண்டும் என்றும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.    

logo
Andhimazhai
www.andhimazhai.com