உயர் கல்வித் துறையின் அறிவிப்புகளை அமைச்சர் பெ. விஸ்வநாதன் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
அறிவிப்பு விவரம்:
1) அரசு கலை – அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 6,000 உதவிப் பேராசிரியர்கள் முறையான தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றி மூன்று கட்டங்களாக நியமிக்கப்படுவார்கள்.
2) அரசு கலை – அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 30,000-லிருந்து ரூ. 35,000 ஆகவும், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரிபவர்களின் தொகுப்பூதியம் ரூ. 25,000-லிருந்து ரூ. 30,000 ஆகவும் உயர்த்தப்படும்.
3) தேசிய மதிப்பீடு – தரச்சான்று அவையின் அங்கீகாரம் பெற்ற 10 அரசு கலை – அறிவியல் கல்லூரிகள் ரூ. 20 கோடி செலவில் தன்னாட்சி கல்லூரிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
4) அரசு கல்வி நிறுவனங்களின் கல்விசார் உள்கட்டமைப்புகள் ரூ. 1000 கோடி செலவில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் மேம்படுத்தப்படும்.
5) செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், கணினியியல், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்துவரும் துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்க பெரியார் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம் நிறுவப்படும்.
6) செயற்கைக்கோள் வடிவமைக்கும் திட்டத்திற்காக, தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 10 திட்டங்களுக்கு ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
7) அரசு கல்லுாரிகள் அல்லது அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் விவசாய நிலம் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.
8) ஆதிதிராவிடர், பழங்குடியினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு வழங்கப்படும்.