காசா இனப்படுகொலைகளைக் கண்டித்தும், பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் - 8.10.2025 அன்று சென்னையில் சிபிஐ(எம்) தலைமையில் பல கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
காசா மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்தும், இனவெறிப்பிடித்த இஸ்ரேல் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம் தலைமையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் சென்னையில் வருகின்ற 8.10.2025 அன்று காலை 10.00 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
தி.க. தலைவர் கி. வீரமணி, சிபிஐ (எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வபெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், விசிக நிறுவனத் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் திருமிகு தி. வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே. நித்தியானந்தன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநில செயலாளர் தோழர் பழ. ஆசைத்தம்பி, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் திருமிகு தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
காசா மீது இனப்படுகொலைகளை அரங்கேற்றி வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பகுதி பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்