
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (நவம்பர் 2) குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தெற்கு மியான்மர் கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதனால் இன்று மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் வங்கதேச கடற்கரை பகுதிகளை ஒட்டி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 நாட்களுக்கு மழை
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் நவம்பர் 7 ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.