ஆவின் பாலை கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்திருந்தாலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல் தொடர்பாக, டீலர்கள், கடைக்காரர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.
மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஆவின் பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது? மது அருந்துவோரே பாட்டிலை கவனமாகக் கையாளும் போது சாதாரண மக்கள் பாட்டியலை கையாள முடியாதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
மேலும், இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனையில் பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துவது தொடர்பாக மக்கள் கருத்து கேட்கப்பட்டது.
இதையடுத்து தலைநகர் சென்னை தான் சரியாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. முதலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் செயல்படுத்திப் பார்க்க திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு டீலர்கள், பங்குதாரர்கள் ஆகியோரை பொறுத்து படிப்படியாக விரிவுபடுத்த முடிவு செய்திருக்கின்றனர்.
“ஆவின் கண்ணாடி பாட்டில் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து வருகிறோம். இதில் எந்தவித சிரமும் இருக்காது என்று கருதுகிறோம். அதேசமயம் தற்போது பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் கவரிலும் பெரிதாக பிரச்சினை இல்லை. இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கிடையாது.” என அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த சனிக்கிழமை கரூரில் தெரிவித்திருந்தார்.
பாட்டில்களில் பாலை விற்பனைக்கு கொண்டு வருவதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. பிளாஸ்டிக் பாக்கெட்களை ஒப்பிடும் போது பாட்டில்களை தயாரித்து, அவற்றை பாதுகாப்பாக விற்பனைக்கு கொண்டு செல்ல போதிய அளவில் முதலீடுகள் தேவைப்படும். பாட்டில்களை கையாள்வதில் மிகவும் கவனம் தேவை. பால் பாட்டில் வழியில் உடைந்து விட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்பார்கள்? போன்ற கேள்விகளை பால் விற்பனையாளர்கள் எழுப்புகின்றனர்.
“ஒரு மளிகை கடையில் உள்ள பிரிட்ஜ் அல்லது கூலரில் பால் பாக்கெட்களாக இருந்தால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வைக்கலாம். அதுவே பால் பாட்டில்கள் என்றால் இட நெருக்கடி ஏற்படும். இதனால் பாட்டில்களை பிரிட்ஜ் அல்லது கூலரில் வைப்பதற்குப் பதில் வெளியே வைக்க வாய்ப்புள்ளது. அப்படி செய்தால் பால் கெட்டுப் போகக் கூடும். இத்தகைய சிக்கல்களை சமாளித்தால் தான் ஆவின் பால் பாட்டில் விற்பனை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்” என்கிறார் பால் விற்பனை செய்யும் ஒரு கடைக்காரர்.