தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் இன்று முதல் விருப்ப மனு தரலாம் என்று அக்க்ட்சியின் பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல் ( மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) உட்பட்டோர், தங்களின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தனர்.
இந்நிலையில், இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் என்று நேற்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை :
"(35) மதுராந்தகம் (தனி), (101) தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் இன்று (8.9.2026) முதல் 10.9.2026 -வியாழக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, 10.9.2026 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம்." என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.