அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதித்தால் கட்சியின் நிலைமை மோசமாகிவிடும்! - உச்சநீதிமன்றம்

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதித்தால் கட்சியின் நிலைமை மோசமாகிவிடும்! - உச்சநீதிமன்றம்

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதித்தால் அக்கட்சியின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை வானகரத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த டிசம்பர் 8ஆம் தேதி விசாரித்தது. பின்னர் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சி விதிகளின்படி நீக்கம் செய்யப்படவில்லை; இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க அ.தி.மு.க.வில் விதி ஏதும் இல்லை என்றும் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. இடைக்காலத் தடை விதித்தால் உங்கள் வழக்கை ஏற்றதாக ஆகி விடும். நீதிமன்றம் தலையிட்டால் உட்கட்சி பிரச்சினை பூதாகரமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அ.தி.மு.க.வின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அதேவேளையில் ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள சிவில் சூட் வழக்குகளை கீழமை நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com