திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேரில் இருக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், நேற்று அம்மோனியா வாயு கசிந்தது. அப்போது அங்கு பணியில் இருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதில் 5 பேர் உயிரிழந்ததுடன், 60-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பாதிக்கப்பட்டதில் 60 பேர் பெண்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்தவர்களின் உடல்களை தமிழக அரசின் செலவிலேயே அவர்களின் சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்தத் தொழிற்சாலையின் உரிமையாளர், மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரிக்க 3 அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.