ஊழலுக்காக சதுப்பு நிலம் என அறிவிக்காமல் இருப்பதா?
”உலக சதுப்பு நிலங்கள் நாள் பிப்ரவரி இரண்டாம் நாளான இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் போலவே திமுக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் நோக்குடன், தமிழ்நாடு சதுப்புநிலங்கள் ஆணையம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 2625 நாட்கள் ஆகும் நிலையில், ஒரே ஒரு சதுப்புநிலம் கூட அறிவிக்கை செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது.” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதைப் பற்றி விவரித்துள்ளார்.
”உலகம் முழுவதும் உள்ள சதுப்புநிலங்களை காப்பதற்கான ராம்சார் பன்னாட்டு உடன்படிக்கை ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் 02.02.1971 அன்று ஏற்கப்பட்டதைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2&ஆம் தேதி உலக சதுப்பு நிலங்கள் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற 98 தளங்கள் உள்ளன. நாட்டிலேயே அதிகமாக 20 ராம்சார் தளங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால், அவை உட்பட தமிழ்நாட்டின் எந்த சதுப்புநிலமும் இதுவரை சட்டப்படி அறிவிக்கை செய்யப்படவில்லை என்பது மோசமான நகைமுரண்.
மனித வாழ்வின் அடிப்படை ஆதாரமான இயற்கை வளங்களில் சதுப்புநிலங்கள் மிகவும் முதன்மையானவை ஆகும். இந்தியாவில் எண்ணிக்கை அடிப்படையில் மிக அதிக சதுப்பு நிலங்கள் கொண்ட முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 42,978 சதுப்புநிலங்கள் உள்ளதாக தமிழ்நாடு சதுப்புநிலங்கள் இயக்கம் (Tamil Nadu Wetlands Mission) கூறுகிறது. சதுப்புநில பரப்பளவு அடிப்படையில் 6ஆவது இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள சதுப்புநிலங்களில் 11.6% தமிழ்நாட்டில் உள்ளன.
2017&ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள்(The Wetlands (Conservation and Management) Rules,2017) சதுப்புநிலங்களை பாதுகாப்பதற்கான பல்வேறு சட்டபூர்வமான கடமைகளை கொண்டிருக்கின்றன. இந்த விதிகளை தமிழ்நாட்டில் செயலாக்க வேண்டும் என பசுமைத் தாயகம் உள்ளிட்ட அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, 26.11.2018 ஆம் நாள் தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் ஆணையத்தை (Tamil Nadu State Wetland Authority) தமிழ்நாடு அரசு அமைத்தது. ஆனால், அதன்பின் 7 ஆண்டுகளுக்கும், அதாவது 2625 நாள்களாகியும், இதுவரை ஒரே ஒரு சதுப்பு நிலம் கூட 2017&ஆம் ஆண்டின் சதுப்புநில விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டு அறிவிக்கை செய்யப்படவில்லை. சதுப்பு நிலங்கள் அறிவிக்கை செய்யப்படுவதை திமுக அரசு உள் நோக்கத்துடன் திட்டமிட்டே தாமதப்படுத்தி வருகிறது.
இஸ்ரோ அமைப்பின் SAC Wetlands Atlas - 2021 பட்டியலில் உள்ள 2.25 எக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட தமிழகத்தின் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்திற்குள் வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் 11.12.2024-ஆம் நாள் உத்தரவிட்டது. அதன்பின் ஓராண்டுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக அரசு உள்நோக்கத்துடன் தான் செயல்படுத்த மறுக்கிறது என்று நம்புவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் 4&ஆம் பிரிவின்படி, நீர் நிலைகளை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் தொழிற்சாலைகள் அமைப்பதும், தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்துவிதமான கழிவு மேலாண்மை விதிகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திடக்கழிவுகளை கொட்டுவது‘ கழிவு நீரை கலக்கச் செய்வது, கட்டுமானங்களை மேற்கொள்வது போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான நீர் நிலைகளை மேற்படி விதிகள் பிரிவு 7 (3)-இன் கீழ் அங்கீகரித்து அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டால், அந்த நீர்நிலைகள் அனைத்தும் சட்டப்பூர்வமான பாதுகாப்பை பெற்று விடும். அனைத்து நீர்நிலைகளின் எல்லைகளும் காலகாலத்திற்கும் பாதுகாக்கப்படும். அவ்வாறு நடந்திருந்தால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதி அளித்தல், கழுவேலி மற்றும் உப்பங்கழி நிலத்தில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைத்தல் போன்ற அத்துமீறல்களை திமுக மேற்கொண்டிருக்க முடியாது. அதனால் தான் ஊழல் செய்வதற்கு வசதியாகவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்வதை திமுக அரசு தாமதப்படுத்தி வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு கடந்த திசம்பர் 11&ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில் நேர்நின்ற வழக்கறிஞர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களையும் செயற்கை கோள் உதவியுடன் துல்லியமாக அளவிட்டு, எல்லைகளை வரையறுக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், இது தொடர்பான அறிக்கை விரைவில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால், அதன்பின் 50 நாள்களுக்கு மேலாகியும் இன்று வரை சதுப்பு நிலங்கள் அறிவிக்கை செய்யப்படவில்லை. அதற்கான காரணங்களும் தெரியவில்லை.
உச்சநீதிமன்றமே ஆணையிட்ட பிறகும் சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய திமுக அரசு மறுப்பது இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். எனவே, இனியும் துரோகத்தைத் தொடராமல், அனைத்து சதுப்புநிலங்களையும் பாதுகாத்து, மேம்படுத்தும் நோக்கில், அவற்றை சட்டப்படி அறிவிக்கை செய்ய வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

