அண்ணாமலை
அண்ணாமலை

சென்னை மழை பாதிப்பு: தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும்தான் காரணம்- குறைகூறும் அண்ணாமலை!

சென்னையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு இரண்டு ஆட்சிகளிலும் செலவிடப்பட்ட வடிகால் பணிகள் கேள்விக்கு உரியதாகி இருக்கின்றன என்று பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தன் சமூக ஊடகப் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில்,

”சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது.

தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், மழை வெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி நடந்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்தில் இருப்பதால், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது.

ஒவ்வொரு அரசும், மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.” என்றும்

”அதிகாரிகள் கடுமையாக உழைத்தும், நிலைமையை முழுமையாகச் சீர்செய்ய முடியவில்லை என்றால், அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்பதுதான் பொருள்.” என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக, தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாகக் கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியதாக ஆக்கியிருக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com