முதலமைச்சர் ஸ்டாலின் - அண்ணாமலை, பா.ஜ.க. மாநிலத் தலைவர்
முதலமைச்சர் ஸ்டாலின் - அண்ணாமலை, பா.ஜ.க. மாநிலத் தலைவர்

மறுக்கா மறுக்கா கேட்டீங்கன்னா எப்புடீங்க... முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை காட்டமான பதில்!

மறுக்கா மறுக்கா கேள்வி கேட்டீங்கன்னா எப்புடீங்க என கொங்கு பகுதியின் பிரபல வாசகத்தைப் போல, முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கிறார், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை.

தமிழ்நாட்டுக்கு பத்து இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மைய அரசு ஒதுக்கியதாகக் கூறியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதில் அளிக்கும்படியாக அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், ”சிறிய கடைகளில் வேலைக்குச் சேரக் கூட, கணக்கு என்ற அடிப்படைத் தகுதி தேவைப்படும் நிலையில், முதலமைச்சரின் மகன் அமைச்சர் உதயநிதி, மத்திய அரசு ரூ.1.7 லட்சம் கோடிதான் தமிழகத்துக்குக் கொடுத்திருக்கிறது, 29 பைசா தான் கொடுக்கிறது என்று ஊர் ஊராகப் பொய் சொல்லிக் கொண்டிருக்கையில், முதலமைச்சர் ஸ்டாலின், 5.5 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளது என்று கூறுகிறார். குடும்பத்துக்குள் பேசி ஒரு முடிவுக்கு முதலில் வாருங்கள். ” என்று அவர் கூறியுள்ளார்.

”தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக, நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் இவற்றை எல்லாம் மேம்படுத்தச் செலவிடப்பட்ட நிதி மற்றும் தமிழகத்தில் செயல்படும் திட்டங்களுக்கான மானியம் ஆகியவையை எந்தக் கணக்கில் வைப்பீர்கள் திரு.ஸ்டாலின் அவர்களே? திமுக ஸ்டிக்கர் ஒட்ட முடியாத காரணத்தால், இவை மத்திய அரசு வழங்கிய நிதி இல்லை என்று ஆகிவிடுமா?” என்று அவர் கேட்டுள்ளார்.

மேலும், ”மத்திய அரசு பெறும் வரிப்பணத்தில், தமிழகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாடு, பேரிடர் நிதி, அதுபோக, நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் திட்டங்கள் என ஏராளமாக கணக்கு சொல்ல முடியும். நீங்கள் பெறும் வரிப் பணத்தை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூற முடியுமா? டாஸ்மாக் வருமானம் தொடங்கி, இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப் பதிவு கட்டண உயர்வு, கொழுப்பு திருடப்பட்ட பால் விலை உயர்வு, இவை போக, ஜிஎஸ்டியில் சுமார் 70% நிதி என நேரடியாக தமிழக அரசுக்கு வரும் வருமானம் இத்தனை இருக்கிறது.” என்றும் அண்ணாமலை  குறிப்பிட்டுள்ளார்.

”இத்தனையும் இருக்கையில் மாநிலம் முழுவதும், அரசுப் பணியாளர்கள், ஆசிரியப் பெருமக்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள், சிறுகுறு தொழில்முனைவோர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்களே ஏன்? தமிழக அரசுக்கு வரும் வருமானம் எல்லாம் எங்கே செல்கிறது?” என்று அவர் கேட்டுள்ளார். 

பிரதமர் மோடி உறுதியளித்த, பத்து லட்சம் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் கடந்த 18 மாதங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்பதுகூட முதலமைச்சருக்குத் தெரியவில்லை எனக் குறைகூறியுள்ள அண்ணாமலை, 

கடந்த 2021 தேர்தலின்போது திமுக வாக்குறுதியளித்த மூன்றரை லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் என்ன ஆனது என்பதை முதலமைச்சர் மக்களுக்குச் சொல்லத் தயாரா என்றும் கேட்டுள்ளார். 

மதுரை எய்ம்ஸ் கல்லூரிக் கட்டிடங்கள், 2026 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் பல முறை அறிவித்த பிறகும், மீண்டும் மீண்டும் மதுரை எய்ம்ஸ் என்று பேசுவதாகவும் கூறியுள்ள அண்ணாமலை, முதலமைச்சர் உளறுவதாகவும் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் 2026 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வருவது உறுதி. அது மோடியின் கேரண்டி என்ற அண்ணாமலை, ஆனால், நீங்கள் தருவதாகச் சொன்ன விடியல் எப்போது வரும் என்றும் கேட்டுள்ளார். 

மேலும், “இத்தனை ஆண்டுகளாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்திற்கும் குடும்ப ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், மூன்று ஆண்டு காலமாக, திமுக ஆட்சி வெற்று விளம்பரத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை, தற்போது மக்களுக்குத் தெரிய வந்ததும், பதட்டத்தில் மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.” என்றும் சாடலாகவும் குத்தலாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com