தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுச்சதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
”ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய த.வெ.க. அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.” என்று அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் - லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.
அதன் விவரம்:
முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள்:
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எஸ். பாலச்சந்திரன் ஐஏஎஸ், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆகியோர் இந்தப் பணிகளைத் திறந்துவைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர்.
இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ஒப்பந்தம் 1 - பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2):
இங்கு அசோகத் தூண் அமைத்தல், அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது; இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாள்களுக்கு முன்னரே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர், அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் அமைச்சர், தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன.
ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1):
தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல், அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்தச் சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாள்களுக்கு முன்னரே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோதக் கூட்டணியை உறுதி செய்கிறது.
அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு:
இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்றுவரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடமிருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.
மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதேபோல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத் தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளைத் திட்டமிட்டு புறக்கணிப்பதைக் காட்டுகிறது.
அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்:
இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கைத் துரோகம், டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.
1. உடனடிப் பணியிடை நீக்கம் (Suspension):
ஒப்பந்தப்புள்ளி கோரும் அலுவலரான தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
2. துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை:
இந்த டெண்டர் முறைகேடு குறித்து விரிவான உயர்மட்ட துறை சார்ந்த விசாரணை நடத்தி, குற்றவாளி என உறுதி செய்யப்படும்பட்சத்தில் ஆணையர் உட்பட அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்.
3. ஊழல் தடுப்புத் துறையின் கிரிமினல் வழக்கு:
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இந்த போலி டெண்டர்கள் மூலம் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கூட்டுசதி , அரசுக்கு பண இழப்பு மற்றும் பண பரிமாற்றம் இருந்தததா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாகக் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
4. பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment):
விதிமுறைகளை மீறி முடிக்கப்பட்ட இந்த இரண்டு பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி பட்டுவாடா செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
5. கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting):
சட்டவிரோத டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களைக் கருப்புப் பட்டியலில் சேர்த்து, அவர்கள் தமிழக அரசின் பிற டெண்டர்களில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும்.
6. டெண்டர் வெளிப்படைத்தன்மை:
tntenders.gov.in இணையதளத்தில் ஒப்பந்தம் வழங்கப்படும்வரையிலான (AOC) அனைத்து நிலைகளையும் பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படையாக உடனடியாகப் பதிவேற்ற வேண்டும்.
இத்தகைய ஒப்பந்த முறைகேடுகள் மீது தமிழக அரசு எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அறப்போர் இயக்கத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.