முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த கோவை செம்மொழி பூங்காவில் இத்தனை சிறப்பம்சங்களா?

கோவை செம்மொழி பூங்காவில் முதல்வர் ஸ்டாலின்
கோவை செம்மொழி பூங்காவில் முதல்வர் ஸ்டாலின்
Published on

உலகத்தரத்திலானா கோவை செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

2010ஆம் ஆண்டு நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அன்றைய முதலமைச்சரான கலைஞர் கருணாநிதி கோவை காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் முடங்கின. 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் 2023ஆம் ஆண்டு செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் முதல் கட்டமாக 45 ஏக்கரில் ரூ. 208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா திறந்து வைத்த முதலமைச்சர் அங்கு வைக்கப்பட்டுள்ள கடையேழு வள்ளல்களின் சிற்பங்களை பார்வையிட்டார்.

உலகத்தரம் வாய்ந்த செம்மொழிப்பூங்காவில், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம். நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை,திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன.

மேலும் 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.

பொழுதுபோக்கு அம்சங்கள்

நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம். 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை. உணவகம். ஒப்பனை அறை. சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதைகளுடன் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. உயர்தர உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம். 4,000 சதுர அடி பரப்பளவில் உள்வன மாதிரி காட்சியமைப்பு. குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 அடி பரப்பளவில் சதுர விளையாட்டுத்திடல். சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை. மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக தனித்தன்மையான விளையாட்டுத்திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இளம்வயதினர் படிப்பதற்கு ஏதுவாகப் படிப்பகம் முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு. அதில் QR குறியீடுகள் மற்றும் Barcode போன்ற தொழில்நுட்ப வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள். 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்குக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பூங்கா வளாகத்தினுள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com