“கூட்டணிக்குள் கசப்பான சம்பவங்கள்” – ஜோதிமணி எம்.பி. காட்டம்!

ஜோதிமணி எம்.பி.
ஜோதிமணி எம்.பி.
Published on

கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் கவிதாவை திமுகவில் இணைத்த செந்தில் பாலாஜிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளை திமுக விழுங்கிவிடும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவருகிறார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் எஸ்.கவிதா இன்று திமுகவில் இணைந்தார்.

இதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக ஊடகப்பக்கத்தில், “சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி அவர்களின் இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.

கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுக வின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.

கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய, காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது.

கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அண்ணன் செல்வப் பெருந்தகை அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.

தமிழ்நாட்டின் மொழி, இனம், பண்பாடு, எதிர்காலம் அனைத்திற்கும் பாசிச சக்திகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற இன்றைய அரசியல் சூழலில் நம் அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யும்.

பின்குறிப்பு: தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் கடுமையான எதிர்வினையை அடுத்து செந்தில் பாலாஜி அவர்களின் இப்பதிவு இப்பொழுது நீக்கப்பட்டிருக்கிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com