"மூளையை தின்னும் அமீபா பாதிப்பு என்பது தொற்றுநோய் அல்ல. இருந்தாலும், தமிழகத்தில் கூட மாசுபட்ட குளம் மற்றும் குட்டைகளில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது," என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலமான கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்திற்கும் பாதிப்பு இருக்குமா? என்பது குறித்து மருத்துவத் துறை அமைச்சர் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "மாசடைந்த நீர்நிலைகளில் குளிக்கும்போது மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான தலைவலியும், காய்ச்சலும், கழுத்துவலியும், மயக்கம் போன்றவையும் இருக்கும்.
கேரள அரசாங்கம் இதற்கு தேவையான சிகிச்சைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. கேரள எல்லையிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு அச்சமும் பாதிப்பும் ஏற்படும் நிலை இல்லை.
இது தொற்றுநோய் அல்ல. இருந்தாலும், தமிழகத்தில் கூட மாசுபட்ட குளம், குட்டைகளில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
பராமரிப்பு இன்றி இருக்கும் நீச்சல் குளங்களிலும் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. நாம் பெரிதாகப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை," என்று அவர் விளக்கம் அளித்தார்.