
”தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கூடுதல் விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் வாரியத்திற்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. 2002-03 காலத்தில் நடைபெற்ற இந்த ஊழலின் விசாரணையை தி.மு.க. அரசும் காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவும் திட்டமிட்டு தடுத்து வந்த நிலையில், உயர்நீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
“ திமுக அரசின் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதியும், கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதியும் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், அவற்றின் மீது திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதே குற்றச்சாட்டு குறித்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் அறப்போர் இயக்கம் 2023&ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி புகார் அளித்தது. ஆனால், அதன் மீதும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அறப்போர் இயக்கமும், அதிமுகவும் தொடர்ந்த வழக்குகளில் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற ஆற்று மணல் கொள்ளை ஊழல், பணி நியமன ஊழல், அதிகாரிகள் பணியிட மாற்ற ஊழல், ஒப்பந்த ஊழல் ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஆணையிட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் ரூ.397 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்தும் விசாரணை நடத்த நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது திமுகவின் ஊழல்களுக்கு எதிராக பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் மிக முக்கிய வெற்றியாகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021&-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை மின்சார வாரியத்திற்கு 45,800 மின்மாற்றிகள் ரூ.1182 கோடிக்கு வாங்கப்பட்டன. ஒவ்வொரு மின்மாற்றியும் 50% வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில் மின்வாரியத்திற்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 500 கிலோ வோல்ட்ஸ் ஆம்பியர் திறன் கொண்ட 800 மின்மாற்றிகள் வாங்க கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் 23.11.2021&-ஆம் நாள் திறக்கப்பட்ட போது, அதில் பங்கேற்ற 26 ஒப்பந்ததாரர்களும் சொல்லி வைத்தது போன்று ஒரு மின்மாற்றிக்கு ரூ.13,72,930 என்ற விலையை குறிப்பிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்தி விலையைக் குறைத்து ரூ.12,49,800 என்ற விலைக்கு வாங்கியதாக மின்வாரியம் தெரிவித்தது.
ஆனால், மத்திய அரசால் நடத்தப்படும் மின்னணு சந்தைத் தளத்தில் இதன் விலை ரூ.8,91,000 மட்டும் தான். தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தினர் குறிப்பிடும் விலை ரூ.7,89,753 தான். இவை அனைத்தையும் விட குறைவாக ஒரு மின்மாற்றி ரூ.7,87,311 என்ற விலைக்கு இராஜஸ்தான் அரசு வாங்கியுள்ளது. அதாவது சந்தை விலையை விட 37% கூடுதலாக விலை கொடுத்து மின்மாற்றிகள் வாங்கப்பட்டுள்ளன. அதாவது ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு சந்தை விலையை விட 50% கூடுதலாக விலையை குறிப்பிட்டுள்ளனர். அதன்பின் மின்வாரியம் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிறிதளவு விலையை குறைத்துள்ளனர். இவை அனைத்தும் திட்டமிட்டு திரைக்கதை எழுதி நடத்தப்பட்ட நாடகம்.
ஒப்பந்ததாரர்கள் கட்டுபடியாகும் விலையை குறிப்பிடவில்லை என்றால், அந்த நடைமுறையை ரத்து செய்து விட்டு, புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் அரசு பேச்சு நடத்தி, அதிக விலை கொடுத்து மின்மாற்றிகளை கொள்முதல் செய்ததிலிருந்தே இதில் ஊழல் நடந்திருப்பது உறுதியாகிறது .மின்மாற்றி கொள்முதலில் ஏற்பட்ட இழப்புக்குக் காரணம் அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத் தலைவர் இராஜேஷ் லகானி மற்றும் அதிகாரிகள் தான் காரணம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு, இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட வெகுமதிகளை வழங்கி வந்தது.
மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதில் மட்டுமின்றி, ஒரு யூனிட்டுக்கு ரூ.20 வரை விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்தது, வீடுகளுக்கு பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டருக்கு சந்தை விலையை விட 350% அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய பேரம் பேசி முடித்திருப்பது என திமுக ஆட்சியில் ஊழலின் விளைநிலமாக மின்சாரத் துறை திகழ்ந்து வருகிறது. இந்த அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்துவதுடன் திமுக ஆட்சியின் பல்வேறு கால கட்டங்களில் மின்சாரத் துறையின் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஊழல் மற்றும் மக்கள்விரோத ஆட்சிக்காக சட்டமன்றத் தேர்தலில் மக்களால் தண்டிக்கப்பட்டிருக்கும் திமுக, சட்டத்தின்படியும் அதன் ஊழல்களுக்காக தண்டிக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.” என்று அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.