செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம்
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம்

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைச் செயல்பட வைக்க வேண்டும் – வைகோ

செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தைச் செயல்படவைக்க உடனே ஆவன செய்யவேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”இந்திய ஒன்றிய அரசின் 2002 ஆம் ஆண்டு தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ் உலகளாவிய நோய்த் தடுப்புத் திட்டத்தின் (Universal immunization Programme) அடிப்படையில் செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு சுமார் 594 கோடி ரூபாய் செலவு நிர்ணயம் செய்யப்பட்டு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலோடு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இந்நிறுவனம் அறிவிக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு இரண்டு தொழிற்சாலைக் கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டது. அங்கு தயாரிக்கப்படும் மருந்துப் பொருட்களை தற்சார்பு அடிப்படையில் பரிசோதிக்க தரக்கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட்டது.” என்பதை நினைவூட்டியுள்ளார்.

மேலும், ”இந்நிறுவனத்தில் மருந்துப் பொருட்கள் தயாரிக்க நிர்ணயிக்கப்பட்ட செலவினைவிட அதிகமான தொகை தேவைப்பட்டதால், கூடுதல் செலவுக்காக ஒன்றிய அரசிடம் முறையிட்டது. இங்கு தயாரிக்கப்படும் மருந்தின் சந்தை விலை மிகவும் மலிவடைந்ததால், கூடுதல் செலவினங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது.

2018 ஆம் ஆண்டு முதல் நிதி நெருக்கடியால் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, அங்கு பணியாற்றிய 250 பணியாளர்களுக்கான மாதச் சம்பளமும் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு இடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.”என்றும்,

”முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தைப் பார்வையிட்டு, இந்த நிறுவனத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்குமாறு ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதினார். தமிழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார்கள். ஆனால், ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களிடம் இந்த நிறுவனத்தை ஒப்படைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரியது. எவரும் முன்வராத நிலையில், அந்த முயற்சியும் கைவிடப்பட்டுவிட்டது.” என்றும் கூறியுள்ளார்.

”எதிர்காலத்தில், கொடிய பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்க இந்த நிறுவனத்தின் பயன் மிகவும் இன்றியமையாதது. எனவே, இலாப நட்டக் கணக்கு பார்க்காமல், இந்த நிறுவனத்தைப் பாதுகாத்துச் செயல்படுத்தச் செய்து, பொதுமக்களுக்கு நன்மை கிடைக்க ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சகம் ஆவன செய்யவேண்டும்.” என்றும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com