கன மழையால் சென்னையில் கடும் பாதிப்புகள்!

சென்னை, தியாகராயர் நகர்
சென்னை, தியாகராயர் நகர்படம்- நன்றி: முகநூல்
Published on

தலைநகர் சென்னையில் இந்த ஆண்டுப் பருவ காலத்தில் நேற்று கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. முதன்மைச் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேற்குநோக்கிச் செல்லும் மின்சாரத் தொடர்வண்டிச் சேவை இடையிடையே நிறுத்திவைக்கப்பட்டது. வெள்ளநீர் வடியாமலும் கழிவுநீர் தேங்கியும் பல பகுதிகள் இன்று மதியம்வரை பாதிப்புடனேயே காணப்படுகின்றன.  

இதனிடையே, கொட்டும் மழையிலும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி மழை பாதிப்புகளைச் சீர்செய்யும் பணியில் மின்வாரிய, மாநகராட்சி, குடிநீர்- கழிவுநீரகற்றல் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நகரின் 20 சுரங்கப்பாதைகளில் நேற்று தியாகராயர் நகர் துரைசாமி பாதை, அரங்கநாதன் பாதை, நுங்கம்பாக்கம் பாதை, பெரம்பூர் நெடுஞ்சாலை பாதை, எழும்பூர் கெங்கு ரெட்டி பாதை ஆகியவை வெள்ளத்தால் அடைபட்டன. இதில் பெரம்பூரில் பாதை மூடப்படுவதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. உடனே அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சற்றுமுன்னர் நிலவரப்படி, கோடம்பாக்கம் அரங்கராசன் சுரங்கப்பாதையைத் தவிர்த்து மீதமுள்ள 19 பாதைகளும் தேக்கம் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com