சென்னை மழை
தமிழ் நாடு
சென்னையைக் குளிர்வித்த மழை!
தலைநகர் சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது. கோடையின் வெப்பத்தால் வெதும்பிப் போயிருந்த சென்னை மக்களை இந்த மழை குளிர்வித்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களாகவே சென்னையில் வானம் மப்பும் மந்தாரமுமாகக் காட்சியளித்தது. நேற்று அதிகாலையிலும் நகரின் பல இடங்களில் இலேசான மழை பெய்து விட்டது. அதனால் தரைக்காற்றின் வெப்பம் சற்று குறைந்து இதமான சூழல் நிலவியது.
தொடர்ந்து இன்றும் காலை முதல் நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை தூறியபடி இருந்தது. சில இடங்களில் மழை நீடித்தது.
தெற்கு, மேற்கு, வடக்கு, கடற்கரையையொட்டிய பகுதிகள் என நான்கு புறங்களிலும் மழையால் சென்னை குளிர்ந்திருப்பது மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.