“இபிஎஸ் வாயை தைத்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்...!”

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி
Published on

மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமியின் வாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தைத்துவிட்டார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிரின் வங்கிக் கணக்குகளில் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வாயை அடைத்துள்ளார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து, அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”முதலமைச்சர் மு.க.ஸ் ஸ்டாலின் எப்போதுமே தமிழ்நாட்டு மக்களுக்கு சொன்னதை செய்து இன்ப அதிர்ச்சி தருவார். சொல்லாததை செய்தும் இன்ப அதிர்ச்சி தருவார். இன்றைக்கு அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான், இன்று தமிழக மக்களுக்கு ரூ. 5000 வழங்கப்பட்டிருப்பது. கடந்த மாதம் 4 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசோடு சேர்த்து மகளிர் உரிமைத் தொகை கிடைத்தது.

இன்றைக்கு 2 ஆயிரம் ரூபாய் கோடை விடுமுறைக்கான போனஸாகவும், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 3 மாதத்திற்கும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை அளித்து முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டு பெண்களுக்கு 1 கோடியே 32 லட்சம் மகளிருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இந்த ஒரு விஷயத்தின் மூலமாகவே நான் 2 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமியின் வாயை தைத்து விட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி எப்போதுமே சொல்வார் செய்யமாட்டார். கடந்த காலங்களிலே பல சம்பவங்கள் மூலமே அதனை எடுத்துக் காட்ட முடியும். ஆனால், சொன்னதைச் செய்கிற ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான். இன்றைக்கே ஏன் முதல்வர் மகளிர் உரிமைத் தொகை தந்தார் என்றால், அறிவித்துவிட்டு நாங்கள் தந்தோம் என்றால் உடனடியாக நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கி விடுவார்கள்.

மகளிருக்கு கிடைக்கக் கூடிய அந்த 5 ஆயிரம் ரூபாய் கிடைக்காமல் போய்விடும் என்பதால் தான் தடை உத்தரவு வாங்குவதற்கு முன்பே இன்று காலையிலேயே மகளிர் உரிமைத் தொகையான 5 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது. எந்த வேகமும் மறைக்க முடியாது.

மக்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நீக்கக்கூடிய சக்திமிக்க உதயசூரியன் போன்றவர் முதல்வர் ஸ்டாலின். பாஜகவும், அதிமுகவும் எத்தனை சதிகளைச் செய்தாலும் திராவிட மாடல் 2.0 அரசு அமைவதையோ, அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளையோ நிச்சயமாக தடுத்து நிறுத்த முடியாது.

இந்தியாவே வியந்து பார்க்கிற அளவுக்கு அதிரடியாக பல திட்டங்களைத் தந்து, மக்கள் விரோத திட்டங்களை, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் திட்டங்களுக்கு முதலிலேயே எதிர்ப்புக் குரலை கொடுக்கக் கூடியவர் முதல்வர் ஸ்டாலின்.

2 வாரத்துக்குள் தமிழ்நாட்டு மக்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கிறது. இதுபோன்று வரலாற்றிலேயே தேர்தலுக்கு முன்பே வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய ஆட்சி இது.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com