கே.பி.சுந்தராம்பாள் வெண்கலச் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கே.பி.சுந்தராம்பாள் சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்.
கே.பி.சுந்தராம்பாள் சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்.
Published on

தமிழிசை உலகின் ஈடு இணையற்ற குரலாகவும் திகழ்ந்த ‘கொடுமுடி கோகிலம்’ கே.பி. சுந்தராம்பாளுக்கு, அவரது சொந்த ஊரான கொடுமுடியில் அமைக்கப்பட்ட முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 8) திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 1908-ஆம் ஆண்டு கே.பி. சுந்தராம்பாள் பிறந்தார். இவர் தனது அசாத்தியமான குரல் வளத்தால் திரைத்துறையிலும், நாடகத்துறையிலும் முத்திரை பதித்தவர். அந்த காலத்திலேயே ஒரு திரைப்படத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெற்று, திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ ஆகத் திகழ்ந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

கலைத்துறையில் பல சாதனைகளைச் செய்த இவர், கடந்த 1980-ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.

கே.பி. சுந்தராம்பாளுக்கு அவரது பிறந்த மண்ணான கொடுமுடியில் சிலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்தது. இக்கோரிக்கையை ஏற்று, சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக 6.5 அடி உயரமுள்ள முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார்.

தங்கள் முன்னோடியின் கலைச் சேவையைப் பாராட்டி, அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டதற்கு கே.பி. சுந்தராம்பாளின் வாரிசுகள் தமிழக அரசிற்கும், முதல்வருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com