சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று, நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை, சுற்றுலா - கலை - பண்பாடு துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
சட்டப்பேரவையில் இன்று கூடியதும் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பு விவரம் :
"1) பொருளாதார வளம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும், தொகுதிப் பணிகளைத் திறம்படச் செயல்படும் வகையிலும் அவர்களின் வசதிக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.
வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உட்பட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப் படியாக வழங்கப்படும்.
அலுவலகப் பணிகளில் உதவி செய்ய ஓர் உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ. 25,000 வழங்கப்படும்.
2) 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3 லட்சத்து 16 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஆவின் பால் நிறுவனம் மூலமாக 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பால் விலை ஒரு லிட்டர் ரூ. 38இலிருந்து ரூ. 41 ஆக உயர்த்தப்படும்.
3) சென்னை பெரம்பூரில் 300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கை வசதிகளுடன் உலகத் தர பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்படும்.
4) முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சம் ஆக உயர்த்தப்படும்.
5) அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 351 கோடி மதிப்பீட்டில் 6,098 கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்." என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.