இயற்கைப் பேரிடர் சமயத்தில்தமிழ்நாட்டுக்கு வராத ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கரூருக்கு மட்டும் வருகைதருகிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
இராமநாதபுரத்தில் அரசு விழாவில் இன்று காலையில் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.
முன்னதாக, கும்பமேளா நெரிசலின்போதும் மணிப்பூர் இனமோதலின்போதும் பா.ஜ.க. குழுவினர் அங்கு செல்லவில்லை என்றும் இப்போது கரூருக்கு மட்டும் அவர்கள் வருகின்றனரே என்றும் முரணாகச் சுட்டிக்காட்டினார்.
கூட்டணிக்கு யாராவது வருவார்களா என கட்சி பிடிக்கும் வேலையை பா.ஜ.க. செய்துவருகிறது; தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள யாரும் அந்தக் கட்சியுடன் கூட்டு வைக்கமாட்டார்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் பேசினார்.
காமராசரைக் கொல்லமுயன்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாதையில் பா.ஜ.க. நடக்க முயல்கிறது என்றும் அவர் சாடினார்.
நாட்டில் உள்ள மாநிலங்களின் நலன்களைப் புறக்கணித்து, அவற்றின் உரிமைகளைப் பறிக்கும்படியாக மத்திய அரசு நடந்துகொள்வதாகவும் முதலமைச்சர் இன்றும் தன்னுடைய கருத்தை அழுத்தமாகக் கூறினார்.
நிகழ்வில், ரூ.176 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.