
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்யவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவு:
”வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா? விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி கோவை, மதுரை மெட்ரோ இரயில், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி, புதிய இரயில்வே திட்டங்கள், நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு. இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை எய்மஸ் போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.